கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களை இடைநீக்கம் செய்தல், மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம், வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தும் குழுவின் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு ஆகியவை தொடர்பான சட்டதிருத்த மசோதாக்கள் சட்டப் பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அல்லது துணைத்தலைவர், கையாடல், நம்பிக்கை மோசடி, ஒட்டுமொத்த தவறான நிர்வாகம், தவறான நடத்தை, ஒழுக்கக்கேடு இவற்றில் ஏதாவதொன்றில் ஈடுபடும்போது அவரை தற்காலிகப் பதவி நீக்கம் செய்யும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார்.
அதேபோல், ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்காகவும், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசால் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் நிதி பயன்பாட்டைக் கண்காணிக்கும் வகையில், ஆய்வு மற்றும் விசாரணை மீதான அதிகாரத்தை அரசிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணைவேந்தரை நியமிப்பதற்கான வல்லுநர் குழுவில் அரசு பிரதிநிதி ஒருவரை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
மேலும், தமிழ்நாடு வேளாண் விளைபொருளை சந்தைப்படுத்துதல் சட்டத்தின்படி, புதிய சந்தைக்குழு அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே இருந்த சந்தைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய சந்தைக்குழுவை அமைக்கும் வரை சந்தைக்குழுவின் அலுவல்களை மேலாண்மை செய்ய தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் மூலம் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டம் தொடர்பான சட்டதிருத்த மசோதாவை சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் அறிமுக நிலையிலேயே திமுக சார்பில் எதிர்க்கப்பட்டது. இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேறின. இவை இன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.