தமிழகம்

அரசுப் பயன்பாட்டுக்கு இடம் கொடுத்தவர்கள் அரசு வேலையில்  இட ஒதுக்கீடு வழங்கக் கோர முடியாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம் 

செய்திப்பிரிவு

அரசுப் பயன்பாட்டுக்கு நிலம் ஒதுக்கியவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோருவது, அரசியல் சாசன உரிமை அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அரசின் திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 1978-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில், அரசுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து அப்துல் காதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த முறை நடத்தப்பட்ட ஆசிரியர்கள் தேர்வில், இந்த இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இட ஒதுக்கீடு வழங்கும்படி அரசை நிர்பந்திக்க முடியாது என்றும் நிலம் வழங்கியவர்களுக்கு அரசுப் பணியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசியல் சாசன உரிமையும் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள்தான் முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT