வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே தண்டவாளங்கள், சிக்னல் அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. இந்த தடத்தில் அடுத்த மாதம் இறுதியில் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.
சென்னை வண்ணாரப் பேட்டையில் இருந்து திருவொற்றி யூர் வரை மெட்ரோ ரயில் வழித் தட நீட்டிப்பு திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். மொத்தம் 9 கி.மீ. தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார் பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரிஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் தண்டவாளம், சிக்னல்கள் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
ரூ.3,700 கோடி மதிப்பு
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்ட பணிகள் ரூ.3,700 கோடி மதிப்பில் நடந்து வருகின்றன. தற்போது, இந்த தடத்தலில் முக்கிய பணியான தண்டவாளங்கள், சிக்னல்கள் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளன. சுமார் 20 சதவீதம் வரையில் செலவுகளை குறைக்கும் பல நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், பாதுகாப்பு விஷயங்களில் எந்த குறைபாடும் இருக்காது. எனவே, இந்த தடத்தில் அடுத்த மாதம் இறுதியில் முதல்கட்டமாக ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தவுள்ளோம். அதன்பிறகு, மெட்ரோ ரயில்கள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தவுள்ளோம். எனவே, வரும் ஜூன் மாதத்தில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.