சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட தங்க வில்வ இலைகள் பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ன. 
தமிழகம்

சிதம்பரம் கோயிலுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் தங்க வில்வ இலை காணிக்கை

செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கருவறையில் உள்ள ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது இந்த ரகசியத்தை பக்தர்கள் அடையாளம் காணும் வகையில் தீபாராதனை செய்யும்போது ரகசியத்தின் முன்பு தங்க வில்வ இலைகள் தொங்க விடப்பட்டிருக்கும்.

தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும்போது பக்தர்கள், இங்கு தங்க வில்வ இலைகளை காணிக்கையாக அளிப்பதுஉண்டு.

இத்தகைய சிறப்புவாய்ந்த தங்க வில்வ இலைகளை சென்னைபோரூரில் உள்ள சிவலோக தருமதிருமடத்தை சேர்ந்த ஸ்ரீ வாதவூர் அடிகள் மற்றும் சிதம்பரம் மௌன சுவாமிகள் மடம் சார்பில் 11 தங்க வில்வ இலைகள் அளிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

இந்த தங்க வில்வ இலைகளை கோயிலின் ஆருத்ரா தரிசனத்தின் கொடியேற்று விழாவின்போது (நேற்று முன்தினம்) சிதம்பரத்தில் உள்ள நான்கு வீதிகளின் வழியாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பார்வைக்கு எடுத்து சென்றனர். பின்பு, நடராஜர் சந்நிதியில் இந்த தங்க வில்வ இலை மாலை சாற்றப்பட்டது.

11 தங்க வில்வ இலைகளிலும் சிவ புராணம் 95 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் மேளதாளத்துடன் எடுத்துச் சென்று நடராஜர் சந்நிதியில் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்து சிதம்பரம் ரகசியத்துக்கு முன்பாக அணிவித்தனர். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT