திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த மலைக்கிராமத்துக்கு வாக்குப் பெட்டிகளை குதிரை மூலமும், வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை தலைச் சுமையாகவும் எடுத்துச் சென்றனர்.
நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் லிங்கவாடி, முளையூர் ஆகிய மலைக் கிராமங்களுக்கு வாகன வசதியில்லை. இதனால், 4 கி.மீ. நடந்து செல்ல வேண்டும். முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதால் மலைக்கிராம மக்களின் வசதிக்காக அங்கேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுஉள்ளது.
இதையடுத்து நத்தம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் மற்றும் தேவையான பொருட்களை அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.
தலைச்சுமை
இதில் முளையூர், லிங்கவாடி கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்குப் பெட்டிகளை அலுவலர்கள் கொண்டு சென்றனர். அழியாத மை, வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட பொருட்களை ஊழியர்கள் தலைச்சுமையாகக் கொண்டு சென்றனர்.
வனப்பகுதியைக் கடந்து செல்லவேண்டும் என்பதால் வனத் துறையினரும் தேர்தல் அலுவலர்களுடன் சென்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் பாதுகாப்புக்காகச் சென்றனர்.