தமிழகம்

போராட்டத்தில் பங்கேற்றதால் ஜெர்மனி மாணவரை நீக்கியது ஐஐடி

செய்திப்பிரிவு

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சென்னை ஐஐடியில் படித்து வந்த ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர் ஜேக்கப் லிண்டன்தாலும் பங்கேற்றார். அப்போது அவர் வைத்திருந்த பதாகையில் ‘நாம் இப்போது 1933 முதல் 1945 ஆண்டு வரையான காலத்தில் இருக்கிறோம்’ என மறைமுகமாக ஹிட்லரின் ஆட்சிக்காலத்தை சுட்டிக்காட்டினார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதுதவிர போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களையும் மாணவர் ஜேக்கப் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் விசா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கி படிப்பதற்கான அனுமதியை குடியுரிமை துறை ரத்து செய்தது. இதனால்ஐஐடி நிர்வாகம் அவரை உடனே வளாகத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. அதன்படி, கடந்த திங்கள்கிழமை விமானம் மூலம் ஜெர்மனிக்கு அவர் அனுப்பப்பட்டார்.

          
SCROLL FOR NEXT