இந்து முன்னணி திருச்சி கோட்டம் சார்பில் இந்து விரோத முறியடிப்பு மாநாடு திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தலைமை வகித்தார்.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. போராட்டத்தைத் தூண்டக்கூடிய யாரும் தேசியவாதிகள் இல்லை. இழந்த நிலங்களை மீட்கும் வகையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். இழந்த கோயில்களை மீட்க வேண்டும். இந்தியாவை இந்து நாடு என அறிவிக்க வேண்டும் என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி, தேச விரோதிகளை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க முன்வர வேண்டும். பள்ளிகள், பொது மருத்துவமனை, பொது இடங்களில் பகிரங்கமாக நடைபெறும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.