கி.மகாராஜன்
பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி மறுத் துள்ளதால், தேர்தல் நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை வழங்கி, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்த அதிமுக வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. முதலில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பின்னர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதேபோல் இந்தாண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கடந்த அக். 26-ல் முதல்வர் கே. பழனிசாமி அறிவித்தார். எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலை இருந்ததால், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும் என அதிமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். இதைவைத்து தேர்தலை தங்களுக்கு சாதகமாக மாற்றலாம் என எண்ணியிருந்தனர். சில அதிமுக வேட்பாளர்கள் நோட்டீஸ், போஸ்டர்களில் இத்திட்டத்தை குறிப்பிட்டே பிரச்சாரம் செய்தனர்.
சில மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிப் பதாக உறுதி அளித்தால்தான், பொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்படும் என அதிமுகவினர் பகிரங்க மாகவே தெரிவித்தனர். இதனால் எதிர்க்கட்சியினர் கலக்கத்தில் இருந்தனர். ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துவிட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் பகுதிகளை ஒட்டியுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடை பெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து ஒன்றியக் குழு தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஒருவர் கூறுகையில், அதிமுக வேட்பாளர்கள் பொங்கல் பரிசு திட்டத்தை பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால், அது நிறைவேறவில்லை. இதனால் தேர்தல் முடிந்ததும், பொங்கல் பரிசு வழங்குவோம் என உறுதி அளித்து பிரச்சாரத்தை தொடர்கிறோம் என்றார்.