தமிழகம்

போராடும் மக்களுடன் நிற்பதால் புறக்கணிக்கிறோம்: குடியரசுத் தலைவர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாத புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை

செ.ஞானபிரகாஷ்

குடியரசுத் தலைவர் பங்கேற்கும் பட்டமளிப்பு நிகழ்வைப் புறக்கணிப்பதாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடி வரும் மக்களுடனும், மாணவர்களுடனும் நிற்பதால் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா வரும் 23-ம் தேதி நண்பகலில் நடக்கிறது. இந்நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். விழாவில் பங்கேற்க பல்கலைக்கழக மாணவர் பேரவை நிர்வாகிகளை பல்கலைக்கழகம் தரப்பில் அழைத்தனர். ஆனால் இவ்விழாவை புறக்கணிக்கப் போவதாக பேரவை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் பரிட்சய் யாதவ், செயலர் குறளன்பன் ஆகியோர் கூறுகையில், "குடியரசுத்தலைவர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர் பேரவை விவரத்தை பல்கலைக்கழகத் தரப்பு கேட்டது.

தற்போது நாடு முழுவதும் குடியரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. போராடும் மக்களுடனும், மாணவர்களுடனும் நாங்களும் நிற்பதால் இவ்விழாவை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT