தமிழகம்

விவசாய நகைக்கடனுக்கான வட்டி உயர்வைத் திரும்பப் பெறுக: தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

விவசாய நகைக்கடனுக்கான வட்டி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞரணித் தலைவர் யுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக யுவராஜ் இன்று (டிச.19) வெளியிட்ட அறிக்கையில், "18.12.2019 அன்று விவசாயிகளுக்கு 7% வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் வங்கிகளுக்கு வழங்கியுள்ள உத்தரவில், விவசாயிகளாக இல்லாதவர்களுக்கும் 7% வட்டியில் விவசாய நகைக்கடன் பெற்று வருவதாகக் கூறி 11% நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4% மானியம் இத்துடன் நிறுத்தப்படுகிறது என்றும் அக்டோபர் 1 முதல் வழங்கப்பட்ட விவசாய நகைக்கடன் வட்டியை உயர்த்தி, வரும் 2020 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் வசூலிக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடனுக்கான வட்டியை 7% இருந்து 9.25% முதல் 11% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால கடனுக்கான 9.25% வட்டியும், ரூ.3 லட்சத்திற்கு மேலான கடனுக்கு 9.50% வட்டியையும் வசூலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவு விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே மத்திய அரசு விவசாய நகைக்கடனுக்கான வட்டி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்று யுவராஜா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT