பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிர்பயா நிதியைக் கையாளுவது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக, நிர்பயா நிதியம் என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது.
இதில் தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவழிக்காமல் மீண்டும் மத்திய அரசிடமே திருப்பி அளிக்கப்பட்ட செய்தி வெளியாகி பரபரப்பானது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “நிர்பயா நிதியத்திற்கு, ஆரம்பகட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை ஒதுக்கி வருகிறது. நிர்பயா திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் செலவழித்துள்ளதாகவும், மீதித் தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெற்று, 100 சதவீதம் செலவிடுவதை உறுதி செய்ய உயர் மட்டக் குழு அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் 2019 ஜனவரி முதல் மே மாதம் வரை 151 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 22 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 10 ஆயிரம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிர்பயா நிதியை தமிழக அரசு பயன்படுத்தி வருவதாகவும், இந்த நிதியைக் கொண்டு பள்ளிகளில் சரியான மற்றும் முறையற்ற தொடுதல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..
இதனையடுத்து, மனு தொடர்பாக மார்ச் 3-ம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.