கல்பாக்கம் நகரியத்தின் பிரதான நுழைவு வாயில்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 156 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அணுமின் நிலைய நிர்வாக புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட அணுமின் நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள், அதிகாரிகள், பணியாளர்கள் கல்பாக்கம் மற்றும் சதுரங்கப்பட்டினத்தில் உள்ள நகரியப் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகரியப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நகைத் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் மற்றும் நகரியப் பகுதிக்குள் வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் நபர்களைக் கண்காணிப்பதற்காக, நகரியப் பகுதியின் பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து பிற நூழைவு வாயில்கள் அனைத்தும் கடந்த 15-ம் தேதி மூடப்பட்டன. நகரியப் பகுதி மக்கள் தங்களிடம் உள்ள ஆதார் அட்டை உள்பட அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்றுகளை நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிஐஎஸ்எப் காவலர்களிடம் காண்பித்து, தங்களின் குடியிருப்புகளுக்குச் செல்லலாம்.
மேலும், நகரியப் பகுதியில் வசிப்பவர்களைச் சந்திக்க வரும் உறவினர்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள நுழைவு வாயில் பகுதியில் பார்வையாளர்கான அடையாள அட்டை பெற்று, நகரியப் பகுதியின் உள்ளே சென்று வரலாம் எனவும் பிரதான நுழைவு வாயில்களாகக் கருதப்படும் புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப்பட்டினம் பகுதி வாயில்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டு காலை 5 மணிக்குத் திறக்கப்படும் என்றும் அவசர காலங்களில் வாயில் பகுதியில் உள்ள சிஐஎஸ்எப் வீரர்கள் நுழைவு வாயில்களைத் திறந்து மூடுவார்கள் என சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டு, சாலைகளின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டன.
அணுசக்தி துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பொதுப்பணித்துறையின் இந்த நடைமுறைக்கு, மீனவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டித்து இரு தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்குச் செல்ல முடியாமல் நுழைவுப் பகுதியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கல்பாக்கம் நகரியப்பகுதியின் பிரதான நுழைவு வாயில் கதவுகளை மூடி உள்ளூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக, அணுமின் நிலைய நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 156 நபர்கள் மீது, அரசு அதிகாரிகளை மிரட்டியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் கல்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.