பெண்ணரசி 
தமிழகம்

உடல்தகுதி போட்டியில் வெற்றி பெற்று வயர்மேன் பணிக்கு 2 குழந்தைகளின் தாய் தேர்வு: கணவரால் முடியாததை சாதித்துக் காட்டிய மனைவி

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூரில் நடைபெற்ற உடல்தகுதி போட்டியில் வெற்றி பெற்று வயர்மேன் பணிக்கு இரண்டு குழந்தைகளின் தாய் தேர்வு செய்யப்பட்டார். கணவரால் முடியாததை மனைவி சாதித்துக் காட்டியுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் வயர்மேன் பணிக்கு உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வுகள் கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு இன்று 18-ம் தேதியோடு நிறைவடைகிறது.

இந்த தேர்வில் பங்கேற்க தஞ்சாவூரில் நடைபெறும் தேர்வுக்கு 1,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தினமும் 200 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வந்தது.

திருச்சி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் வளர்மதி முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் உடல்தகுதி தேர்வில் பங்கேற்றவர்கள் 30 அடி உயர மின்கம்பத்தில் 8 நிமிடத்திற்குள் ஏறி அதன் மேல்பகுதியில் 'கிராஸ்ஆம்' என்னும் இரும்பு குறுக்கு சட்டத்தை இணைக்க வேண்டும். இதே போல் இரண்டு நிமிடம், ஒரு நிமிடம் என மொத்தம் 3 பிரிவுகளில் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் தஞ்சாவூர், திருச்சி, சேலம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண், பெண் கலந்து கொண்டுள்ளனர்.

மின்கம்பம் ஏறுபவர்களின் பாதுகாப்புக்கு கயிறு கட்டப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (டிச.17) நடைபெற்ற உடல் தகுதித் தேர்வில் அரியலூர் மாவட்டம் வளவட்டிகுப்பம் கிராமம் தத்தனூர் தெருவை சேர்ந்த பெண்ணரசி (36) என்பவர் கலந்து கொண்டார். இவர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்றார்.

இவர் 8 நிமிடத்திற்குள் மின்கம்பத்தில் ஏறி இரும்பு குறுக்கு சட்டத்தை இணைக்கும் போட்டியில் 6 நிமிடம் 43 விநாடிக்குள் ஏறி சட்டத்தை இனைத்தார். அதேபோல் கிரிப்பர்ஸ் கட்டும் போட்டியை 8 நிமிடத்தில் முடிக்க வேண்டியதை ஒரு நிமிடம் 40 விநாடிக்குள்ளும், இரும்பு சட்டத்தை தூக்கிக்கொண்டு 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டியதை 25 விநாடிகளில் கடந்தார். இதன் மூலம் இவர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார்.

தஞ்சாவூரில் இதுவரை நடந்த போட்டிகளில் 41 பெண்கள் பங்கேற்றனர். அதில் பெண்ணரசி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணரசியின் கணவர் அழகரசன், மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு 42 வயதாகிவிட்டதால், வயர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதையடுத்து 36 வயதான தனது மனைவி பெண்ணரசியை விண்ணபிக்க வைத்து, மின்கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து உள்ளார். அதன்படி தேர்விலும் வெற்றி பெற்று வயர்மேன் பணிக்குத் தேர்வாகி உள்ளார்.

தேர்வான பெண்ணரசியை தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.நா.சங்கரன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பாராட்டினர்.

இதுகுறித்து பெண்ணரசி கூறியதாவது:

"நான் எந்த வேலை செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்வேன், வயர்மேன் பணிக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் பயிற்சி பெற்றேன். எனது கணவர்தான் பயிற்சி அளித்தார். அவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். அவர், என்னால் நிரந்தர ஊழியராக முடியவில்லை, நீயாவது சாதித்துக் காட்டு என ஊக்கப்படுத்தியதால், நான் தற்போது தேர்வாகியுள்ளேன். நான் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் என் கணவர்தான். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. அபர்ணா என்ற மகளும், அரவிந்தராஜ் என்ற மகனும் உள்ளனர்" என்றார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.நா.சங்கரன் கூறியதாவது:

"தமிழகத்தில் 5 ஆயிரம் வயர்மேன் பணிக்கு 95,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணிக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக் என பல்வேறு பட்டப்படிப்புகள் படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தஞ்சாவூர் மையத்.தில் கடந்த 9-ம் தேதி முதல் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு 200 பேருக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 884 பேர் தேர்வுக்கு வந்திருந்தனர். இதில் 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 41 பெண்கள் தேர்வுக்கு வரவழைக்கப்பட்டதில், பெண்ணரசி மட்டுமே தேர்வு பெற்றுள்ளார்.

இந்த தேர்வினை தொடர்ந்து எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வேலூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தேர்வில் இதுவரை 10 பெண்கள் தேர்வாகி உள்ளனர் என தெரியவந்துள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT