தமிழகம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு எப்போது தேர்தல்?: மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கும், உள்ளாட்சித் தேர்தல்நடத்த 15 நாளில் அறிவிப்பு வெளியிட, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வழக்கறிஞர், முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் முடிந்ததும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இந்த விவரம் உச்ச நீதிமன்றத்துக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றார்.

இதையடுத்து மனு தொடர்பாக, தமிழக தேர்தல் ஆணையம் பதில்அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 23-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT