தமிழகம்

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை புகார்; பள்ளி முதல்வர், 3 ஆசிரியை மீது போக்சோ சட்டத்தில் வழக்கு: ஆசிரியைகளுக்கு ஆதரவாக பெற்றோர் மறியல்

செய்திப்பிரிவு

கோவை சூலூரில் உள்ள மத்தியஅரசுப் பள்ளியில், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக, முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இப்பள்ளியில் படித்துவரும் சகோதரர்களின் தாய் சூலூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில்,‘‘எனது மகன்கள் செல்போன் வைத்திருப்பதாக கூறி, சோதனை என்ற பெயரில் பள்ளியின் முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் துன்புறுத்தியுள்ளனர்.

எனது மகன்களின் உள்ளாடைகளை களைந்து, அவமானப்படுத்தி உள்ளனர். இதை தங்களது செல்போன் மூலம் வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். இச்சம்பவத்தை யாரிடமாவது கூறினால், சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பகிர்ந்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் எனது மகன்கள் இருவரும் மனரீதியாக பாதிக்கப்பட்டனர். இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைஅளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

புகாரின் பேரில், சூலூர் காவல்துறையினர் போக்சோ, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர், 3 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் மாணவ, மாணவிகள் நேற்றுகாலை வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் சிலரும் திருச்சிசாலையில் திடீரென மறியலில்ஈடுபட்டனர்.

அவர்களிடம் சூலூர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட் டத்தை கைவிட்டனர்.

SCROLL FOR NEXT