பாமக நிறுவனர் ராமதாஸை அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி நேற்று வந்தார். ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோரை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
சந்திப்பின்போது, தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதித்தனர். அப்போது, பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் ஒன்றை ராமதாஸுக்கு பிரகலாத் மோடி வழங்கினார்.