"ஸ்டாலின் செய்யும் காமெடி அரசியலால் முதல்வர் பதவிக்கு வரவே முடியாது" என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வர் கே.பழனிசாமி ஒரு ராசியான முதல்வர். எல்லா விலைவாசியையும் அவர் கட்டுக்குள் வைத்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்த வெங்காயத்தை கேலி கிண்டல் செய்தார்கள். நானும் முதல்வரும் சாப்பிட்டு பார்த்தோம். வெளிநாட்டு வெங்காயம் நல்ல காரத்தன்மையாக இருந்தது. அந்த வெங்காயம் நல்ல வெங்காயமா? கெட்ட வெங்காயமா? என்று மக்கள் தான் சொல்ல வேண்டும். அவர்கள்தான் எஜமானர்கள். நீதிமான்கள்.
அதனாலேயே, முதல்வர் மக்களோடு கூட்டணி வைத்துள்ளார். அந்த மக்கள், முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலின் வெற்றிப்பெறலாம் என்று கனவு காண்கிறார். அவரது முதலமைச்சர் ஆசைபோலதான் உள்ளாட்சித்தேர்தல் வெற்றியும் நிராசையாகிவிடும். வெற்றி பெற முடியாதோ என்ற அச்சத்திலே எதிர்க்கட்சித்தலைவரும், மாற்றுக்கட்சியினரும் அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்களை விமர்சனம் செய்கின்றனர். எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். நாங்கள் மக்களைத்தான் நாடிச் செல்கிறோம்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது. தேர்தலை முழுக்க முழுக்க ஆணையம் மட்டுமே நடத்துகிறது. அவர்களுக்கு அரசு உதவி மட்டுமே செய்கிறது. அதிமுக மக்களவையையே 48 நாள் முடக்கினார்கள். இத்தனை எம்பிக்களைக் கொண்ட ஸ்டாலின் மக்களவையை ஒரு முறையாவது முடக்கினாரா? போராட்டம் நடத்தினாரா?
முருங்கைக்காய் விலை, கத்தரிக்காய் விலை அதிகரித்தது, என்று ஸ்டாலின் அரசியல் செய்கிறார். ஸ்டாலினின் நகைச்சுவை அரசியல் அவரை ஒதுபோதும் முதலல்வர் நாற்காலியல் அமர்த்தாது’’ என்றார்.