தமிழகம்

மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு: கமல்ஹாசன் மனுவில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கி.மகாராஜன்

மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில், மகாபாரதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பழவூரைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், "நெறியாளர் என்னிடம் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு என் மனதில்பட்டதை தெரிவித்தேன். யாருடைய மனதையும் நோகடிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

கமல்ஹாசனின் வழக்கறிஞர் வாதிடுகையில், "இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப்படி கருத்து சுதந்திரம் உள்ளது. ஒருவரின் கருத்து பிடிக்காமல் போனால் அதற்கு மாற்று கருத்தை முன்வைக்கலாம். அதற்கு பதில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது" என்றார்.

ஆதிநாதசுந்தரம் தரப்பில், "மகாபாரதம் இந்துக்களின் புனித நூல் என்பது பலரும் அறிந்தது. இதைத் தெரிந்தே கமல்ஹாசன் மகாபாரதத்தை அவமதித்துள்ளார்" எனக் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT