ஆர்.டி.சிவசங்கர்
சமுதாயம் எங்களை ஏற்கணும் என தமிழக வனத்துறையில் பணியில் சேர்ந்துள்ள முதல் திருநங்கை தீப்தி தெரிவித்தார்.
21 வயதான தீப்தி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட வனஅலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பொறுப்பேற்று வனத் துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீப்தி. இவரது தந்தை சுப்ரமணியம், பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் வனக் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
பட்டயக் கணக்காளர் (சிஏ) படிக்க வேண்டும் என்ற கனவில் இளம் வணிகவியல் (B.Com) பட்டத்தை தீப்தி முடித்தார்.
இதுகுறித்து தீப்தி கூறும்போது, ‘‘தந்தையின் வனத்துறை பணிக்கு நான் செல்ல வேண்டும் என எனது தாய் மாலதி விரும்பினார். தந்தை சுப்ரமணியம் பணியில் இருக்கும்போது உயிரிழந்ததால், எனக்கு வனத்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தாய் மாலதியின் விருப்பத்துக்கு ஏற்ப தமிழக வனத்துறையில் சேர்ந்தேன். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பொறுப்பேற்றேன்.
அபினயா மற்றும் சந்தியா ஆகிய இரண்டு திருநங்கைகளே கல்வி கற்க பொருளாதார ரீதியாக மிகவும் உதவியாக இருந்தனர்.
என்னைப் போன்றுள்ள நிறையதிருநங்கைகள் இத்தகைய பணிகளில் சேர வேண்டும். சமுதாயம் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார். இவர் திருநங்கை என தெரிந்ததும், குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து இவரை அம்மு மற்றும் ரஸ்யா என்ற திருநங்கைகள் தத்தெடுத்து வளர்த்தனர். தற்போது தீப்தியை குடும்பம் ஏற்றுக்கொண்டது என அம்மு மற்றும் ரஸ்யா தெரிவித்தனர்.
தங்கள் வளர்ப்பு மகள் அரசு அலுவலகத்தில் பணியில் சேர்ந்துள்ளதை அடுத்து, இவர்கள் வனத்துறை அலுவலகத்துக்கு வந்து தீப்தியின் பணியிடத்தை பார்த்ததுடன், அவரை ஆசிர்வதித்தனர்.