பிரதமர் மோடி - பாரதியார்: கோப்புப்படம் 
தமிழகம்

தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்: பாரதி பிறந்த நாளுக்கு மோடி தமிழில் ட்வீட்

செய்திப்பிரிவு

தேசப் பற்று, சமூகச் சீர்திருத்தம், கவிப்புலமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதி என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியின் 138-வது பிறந்த நாள் இன்று (டிச.11) தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகின்றது. அவரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள், பாரதியை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

பிரதமர் மோடியும், பாரதியை நினைவுகூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப் பற்று, சமூகச் சீர்திருத்தம், கவிப்புலமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றுக்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியைப் போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT