ஆடிட்டர் குருமூர்த்திக்கு அரசியல் தெரியாது எனவும், அவர் கத்துக்குட்டி எனவும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று (டிச.10) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திராவிட கட்சிகளால் தான் தமிழகம் சீரழிந்தது என, துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தொடர்ந்து விமர்சிப்பது குறித்தும், அவருக்கு எதிர்வினையாற்ற அதிமுக தயங்குகிறதா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "எங்களை விட யாரும் குருமூர்த்தியை அதிகமாக கடிந்திருக்க முடியாது. அவர் என்ன வார்த்தை சொன்னாரோ, அதைவிட 100 வார்த்தைகளை சொல்லி அவர் மீது விமர்சனம் செய்திருக்கிறோம். விமர்சனத்துக்கு அஞ்சுகிற இயக்கம் அதிமுக அல்ல.
குருமூர்த்திக்கு அரசியல் தெரியாது, அவர் கத்துக்குட்டி. அவர் ஆடிட்டர். ஏதோ விளம்பரத்திற்காக, அதிமுகவை விமர்சனம் செய்தால் தான் மற்றவர்கள் தன்னை பற்றி அறிந்துகொள்வார்கள் என, விமர்சனம் செய்கிறார். அவர், இனி ஏதாவது சொன்னாலும் பெரிதாக்க வேண்டாம். இமயமலையும் சாதாரண பரங்கி மலையும் ஒன்றாக முடியாது" என தெரிவித்தார்.