திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வரும் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (டிச.3) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம், திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அரசின் ஆளுமைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்கள், தேர்வுக்கு இடையூறு இல்லாமல் கல்வி நிறுவனங்கள், அரசு சார்புடைய நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் 21-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். அதே நேரத்தில் மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு டிசம்பர் 10-ம் தேதி இயங்கும். இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட அரசிதழிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.