பொள்ளாச்சி அருகே பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரை மீட்கும் தீயணைப்பு துறையினர். 
தமிழகம்

பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் கார் கவிழ்ந்து வியாபாரி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரை ஓட்டி வந்த கேரளாவை சேர்ந்த பருப்பு வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மூவாட்டுபுழா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (47), பைனான்ஸ் தொழில் மற்றும் பருப்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவியின் உறவினர் திருமணத்துக்கு, கொடுமுடி செல்வதற்காக நேற்று கேரளாவிலிருந்து பொள்ளாச்சி வழியாக தாராபுரம் சாலையில் காரில் சென்றுள்ளார். நேற்று அதிகாலை சுந்தர கவுண்டனூர் அருகே செல்லும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையால் பள்ளத்தில் குளம்போல தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் கார் தண்ணீரில் மூழ்கியது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நெகமம் போலீஸார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர், நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காரை கயிறு கட்டி தண்ணீரிலிருந்து மீட்டனர்.

காரில் இருந்து வெளியேற முடியாமல் சுப்பிரமணியம் நீரில் மூழ்கி உயிரிழந்தார். போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT