தமிழகம்

பிராணிகள் வெட்டுவதில் விதிமீறல் வழக்கு: குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகள் பொது இடங்களில் வெட்டப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பல்வேறு துறைகளைக் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக இந்திய பிராணிகள் நல அமைப்பின் நிறுவனர் ஜி.அருண் பிரசன்னா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

இறைச்சிக் கூடத்தில்தான் பிராணிகளை வெட்ட வேண்டும். ஆனால் பொது இடங்களில் வெட்டப்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார். இதுகுறித்து பரிந்துரைகள் அளிப்பதற்காக கால்நடைத் துறை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, சாலைப் போக்குவரத்துத் துறை, சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய பிராணிகள் நல வாரியம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆகியவற்றைக் கொண்டு குழு அமைக்க வேண்டும். ஒருவாரத்தில் இக்குழு கூடி, முதல்கட்ட பரிந்துரைகளை வழக்கின் அடுத்த விசாரணைக்கு ஒருநாளைக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT