நுகர்வோருக்கு வழங்கப்படும் ஆவின் பாலில் அப்லாடாக்சின் பாதுகாப்பான அளவிலேயே இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 33 லட்சத்து 23 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் நுகர்வோருக்கு பால் பாக்கெட் மூலம் 25 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. எஞ்சிய பால், மொத்த விற்பனையாகவும், பால் உப பொருட்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உணவு பாதுகாப்புத் துறை, தர நிர்ணய சட்டத் துறை மூலம் நாடு முழுவதும் 6,432 பால் மாதிரிகளை சேகரித்து, அதன் தரம் குறித்து ஆய்வு செய்து, நாளிதழில் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகம், கேரளா, டெல்லி போன்ற மாநி லங்களில் பயன்படுத்தப்படும் பாலில் ‘அப்லாடாக்சின்-எம்1’ என்ற நச்சுப் பொருள் அங்கீகரிக்கப்பட்ட அளவான 0.5 மில்லிகிராமைவிட அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்லாடாக்சின் என்பது திட்டமிட்டு சேர்க்கப்படும் ஒரு கலப்படப் பொருள் அல்ல. இது, கால்நடை தீவனங்களில் வளரும் அஸ்பெர்ஜில்லஸ் பிளாவஸ் என்ற பூஞ்சையால் உருவாகும் நச்சுப் பொருள். இயற்கையாகவே தரமற்ற மற் றும் சரியாக பராமரிக்கப்படாத தீவனங் கள் மூலம் கால்நடைகளில் அப்லாடாக் சின்-பி1 என்பது வளர்சிதை மாற்றத்தால் அப்லாடாக்சின்-எம்1 ஆக உருவாகிறது.
தமிழகத்தில் 17 மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் 5 இணையம் மூலம் பால் பரிசோதனை செய்யப்பட்டதில், உணவுப் பாதுகாப்புத் துறை அங்கீகரித்த பாதுகாப்பான அளவிலேயே அதாவது 0.5 மில்லிகிராமுக்கு குறைவாகவே அப்லாடாக்சின் உள்ளது.
இதுதொடர்பாக மாநில அளவில் அரசு மற்றும் கூட்டுறவு இணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாலில் அப்லாடாக்சின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே இருக்குமாறு உற்பத்தி செய்யவும், பாதுகாப்பான அளவிலேயே நுகர்வோருக்கு பால் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆவின் பால் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.