சென்னை சாந்தோமில் 7 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதி சிறுவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சி நகரை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ரதி. இவர்களின் 7 வயது மகன் லோகேஷ். 2-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன் தினம் முட்புதரில் சடலமாக கிடந்தார்.
இதுதொடர்பாக, போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த பகுதியில் 16 வயது நிரம்பாத சிறுவர்கள் மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனைப் பார்த்த லோகேஷ், தனது பாட்டி பிரேமாவிடம் தெரிவித்துள்ளார். பாட்டி வந்து சிறுவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் கடைக்கு சென்ற லோகேஷை அடித்து உதைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6 சிறுவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.