தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமானது.
தமிழகத்தில் ஏற்கெனவே 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், தென்காசி, ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணமும் மற்றும் வேலூர் மாவட்டத்தில் புதிதாக குடியாத்தம் வருவாய் கோட்டத்துடன் கே.வி.குப்பம் என்ற புதிய வருவாய் வட்டமும் ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா இன்று (நவ.28), திருப்பத்தூர் டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, திருப்பத்தூர் மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.37.9 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களையும், ரூ.27.38 கோடி மதிப்பிலான புதிய பணிகளையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.