தமிழகம்

நீட் முறைகேடு வழக்கு: தருமபுரி மருத்துவ மாணவியின் தாயார் மைனாவதியின் ஜாமீன் மனு தள்ளுபடி

கி.மகாராஜன்

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தருமபுரி மருத்துவ மாணவியின் தாயார் மைனாவதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தருமபுரியைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் தாயார் மைனாவதி ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில்," எனது மகள் நீட் தேர்வில் 397 மதிப்பெண்கள் பெற்று இளங்கலை மருத்துவம் பயின்று வந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்தது. நாங்கள் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.

நான் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருவதால், அதனை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன்பாக இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. முக்கிய குற்றவாளி இன்னமும் கைது செய்யப்படவில்லை. மனுதாரரும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

ஆகவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

SCROLL FOR NEXT