தேர்தலைக் கண்டு அதிமுக பயந்ததாக வரலாறே கிடையாது என, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கும், அதனை எதிர்கொள்வதற்கும் அதிமுக அஞ்சுவதாக, திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பயத்தின் காரணமாகவே, மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களுக்கான பதவிக்கான தேர்தலை மறைமுகத் தேர்தலாக மாற்றி அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளதாகவும் திமுக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், திமுகவுக்குத்தான் தேர்தல் பயம் என, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று (நவ.22) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, எப்போது தேர்தல் வந்தாலும் அதனைச் சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகக் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் பேசும்போது, "அதிமுக எப்போதும் தேர்தலைக் கண்டு பயந்ததாக வரலாறே கிடையாது. திமுகவினர்தான் எங்களைப் பார்த்து பயப்படுகின்றனர். தேர்தல் எப்போது வந்தாலும் அதனைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதிமுக தயார் நிலையில் இருக்கின்றது. அதனால் நாங்கள் தேர்தலைக் கண்டு பயப்படவில்லை" என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.