தமிழகத்தில் திருநெல்வேலி, தூத் துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங் களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு நாட் களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சில தினங்களுக்கும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டி காற்று சுழற்சி ஒன்று உருவாகி இருந்தது. அது தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்த சில தினங்களில் தமிழகத்தை நெருங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அப்போது தமி ழகத்துக்கு அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படு கிறது. மழை வாய்ப்புகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 8 மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு களின்படி அதிகபட்சமாக திரு நெல்வேலி மாவட்டம் சேரன் மாதேவி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் குல சேகரப்பட்டினம் ஆகிய இடங் களில் தலா 10 செமீ, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 9 செமீ, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 8 செமீ, மணியாச்சியில் 7 செமீ, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.