தமிழகம்

முரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன் ஆஜராகி பொய்யர்கள் முகத்திரையை கிழித்தெறிவோம் : ஆர்.எஸ்.பாரதி

செய்திப்பிரிவு

குட்கா விசாரணை, கண்டெய்னர் லாரியில் 560 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம், ஆர்.கே.நகர் தேர்தலில் கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய் குறித்து கவலைப்படாத பாஜக அரசு முரசொலி அறக்கட்டளை விவகாரத்தில் ஆர்வம் காட்டுவது ஏன் என ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளரும் முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. வெளியிட்ட அறிக்கை:

“முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவர் என்ற முறையில் நானும் வழக்கறிஞர்களும் ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி, முரசொலி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமத்தப்பட்டுள்ள வீண் களங்கத்தை, உரிய விளக்கம் அளித்து பொய்யுரைப்போர் முகமூடியைக் கிழித்தெறிவோம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், முரசொலி இடம் குறித்து செய்யப்பட்ட பொய்யான குற்றசாட்டை மறுத்து, திட்ட வட்டமாகவும் தெளிவாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே செய்தியாளர்கள் சந்திப்பிலும், குறிப்பாக கட்சியின் பொதுக்குழுவிலும் அனைத்து ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் உரிய மன்றங்களில் கோரப்படும் பொழுது சமர்ப்பித்து, முரசொலி நாளிதழ் அலுவலக இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிப்போம் என தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில், முரசொலி நாளிதழ் அலுவலக இடம் குறித்த தவறான - பொய்யான - ஆதாரமற்ற - ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைத் திட்டமிட்டு, அரசியல் உள்நோக்கத்தோடு, பாஜக பிரமுகர் ஒருவர் எவ்வித முகாந்திரமுமின்றி கொடுத்த புகாரின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், வருகிற 19 -ம் தேதி அன்று சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள ஆணையத்தின் முன்பு விளக்கம் அளிக்கும்படி கோரியுள்ளது .

ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் கைப்பற்றிய பணத்தைப் பற்றி இதுவரை விசாரணை ஏதும் நடத்தாத மத்திய பாஜக அரசு - 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கைப்பற்றப்பட்ட 560 கோடி ரூபாய் குறித்தும் விசாரிக்காத பாஜக அரசு , தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வீட்டில் ரெய்டு செய்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரிக்காத பாஜக அரசு , குட்கா விஜயபாஸ்கர் மீது உள்ள 40 கோடி ரூபாய் ஆவணங்கள் குறித்து விசாரிக்காத பாஜக அரசு ஆண்டுகள் பல உருண்டோடியும், இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து விசாரணை ஏதும் செய்யாமலும், அதைப் பற்றி கவலை கொள்ளாமலும் கிடப்பில் போட்டுள்ளது மத்திய பாஜக அரசு.

தமிழக மக்கள் மத்தியில் திமுகவின் மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, பாஜக பிரமுகர் கொடுத்த புகாரினை, அவசரம் அவசரமாக, உடனடியாக எடுத்து விசாரணைக்கு அழைத்திருக்கும் மத்திய அரசின் கீழ் இயங்கும் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரியுள்ள விளக்கத்தினை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், 19-ம் தேதி அன்று, முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவர் என்ற முறையில் நானும் - கழக வழக்கறிஞர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராவோம்.

ஆணையம் முன் முரசொலி நாளிதழ் அலுவலகம் இடத்தின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமத்தப்பட்டுள்ள வீண் களங்கத்தை, உரிய விளக்கங்கள் அளித்து, அதன்மூலம் பொய்யுரைப்போர் - பொல்லாங்கு பேசுவோர் முகமூடியைக் கிழித்தெறிவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT