சென்னை
தீர்ப்பு எதுவாயினும், தமிழகம் அமைதிப் பூங்காவாக எப்போதும் திகழ்வதுபோன்று இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழ அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது அரசு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா வழியில் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணிக் காத்து வருகிறது.
சாதி, மத பூசல்கள் இன்றி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து மத நல்லிணக்கத்தைப் பேணி, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகின்றது. அயோத்தி வழக்கு பல்வேறு நிலைகளைக் கடந்து, தற்போது உச்ச நீதிமன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை இன்று (09.11.2019) வழங்க உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று (09.11.2019) வழங்கவுள்ள நிலையில், தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து, எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டைத் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்து, இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.