தமிழகம்

விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டியில் 90 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபட்டு வரும் மக்கள்

செய்திப்பிரிவு

இ.மணிகண்டன்

விருதுநகர்

உலகப் பொதுமறையான திருக்குறளை உலகுக்கு தந்து வாழ்வியல் நெறிகளை வகுத்து கொடுத்த திருவள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்கள் விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டி கிராமத்தினர்.

செம்மொழியான தமிழுக்கு மேலும் புகழ் சேர்ப்பது உலகப் பொதுமறையான திருக்குறள். தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாழ்க்கைக்கான அனைத்துத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளதால், சீன மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மக்கள், அரசன், முனிவர், ஆசிரியர், கணவன், மனைவி, மகன் என ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை நெறியை வகுத்துக் கொடுத்துள்ள திருவள்ளுவருக்கு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் 1929-ம் ஆண்டில் கோயில் கட்டப்பட்டு இன்று வரை சிறப்பாக வழிபாடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

​​​​​​​

உலகம் போற்றும் திருக்குறளைஉலகுக்குத் தந்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கோயில் கட்டி, இங்கு அவரை கடவுளாக வழிபடுகிறார்கள். இக்கோயில் கட்டப்பட்டது முதல் கிராம மக்கள் அனைவரும் வழிபாடு நடத்தி வருவது சிறப்புக்குரியது.

இதுகுறித்து, அய்யன் திருவள்ளுவர் கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: 1929-ம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டு ஆண்டு தோறும் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அய்யன் வள்ளுவர் சிலைக்கு நடத்தப்படும். அதேபோன்று மாசி மாத பவுர்ணமி அன்று இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அப்பொழுது முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு திருவள்ளுவரை வழிபடுவார்கள் என்று கூறினர்.

SCROLL FOR NEXT