தேனி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் வெங்கடேசனின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் சிபிசிஐடி.போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணன், ராகுல் அவரது தந்தை டேவிஸ், இர்பான் அவரது தந்தை முகமதுசபி, பிரியங்கா அவரது தாயார் மைனாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மாணவர்களுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பெற்றோர்கள் தேனி, மதுரை சிறைகளில் உள்ளனர்.
இதில் மருத்துவர் வெங்கடேசனின் நீதிமன்ற காவல் முடிந்தநிலையில் இன்று தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, வெங்கடேசனின் நீதிமன்ற காவலை நீதிபதி பன்னீர்செல்வம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வெங்கடேசன் மீண்டும் மதுரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.