சென்னை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸின் பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக சிறைத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சிறைத்துறை டிஐஜிக்கு அளித்த மனு மீது 40 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பரோல் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (நவ.7) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜரானார். பரோல் கோரிய விண்ணப்பத்தில் தங்க இருக்கும் முகவரியைத் தெரிவிக்காததால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும் தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலினையில் இருப்பதாகவும் நடராஜன் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரத்திற்குத் தள்ளி வைத்தனர்.