உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரிந்த நீதிபதிகளில் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், சென்னையில் பணிபுரிந்த நீதிபதிகளில் சிலர் மதுரை கிளைக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரிந்த நீதிபதிகள் எஸ்.மணிக் குமார், ஏ.செல்வம், பி.ஆர்.சிவக் குமார், எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகா தேவன், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எம்.துரைசாமி, டி.ராஜா, ஆர்.மாலா, பி.தேவதாஸ், எஸ்.விமலா ஆகியோர் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (ஆக. 3) முதல் 3 மாதங்களுக்கு மதுரை கிளையில் பணிபுரிவர்.
நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் ரிட் மேல்முறையீடு, பொதுநல வழக்குகளையும், நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் குற்ற வழக்குகள் மேல் முறையீடு, ஆள்கொணர்வு மனுக்களையும், நீதிபதிகள் ஆர்.சுப்பையா, மின்வாரியம், உள்ளாட்சி நிர்வாகம், வரி, சினிமா, கூட்டுறவு தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி டி.ராஜா தொழிலாளர், வனம், கலால்துறை தொடர்பான ரிட் மனுக்களையும் விசாரிக்கின்றனர்.
நீதிபதி டி.துரைசாமி 2-வது மேல்முறையீட்டு மனுக்களையும், ஆர்.மாலா குற்றவியல் சீராய்வு மனுக்களையும், பி.தேவதாஸ், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு மனுக்களையும், எஸ்.விமலா, குற்றவியல் மேல்முறையீடு, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு தொடர்பான மனுக்களையும், கே.கல்யாணசுந்தரம், ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களையும் விசாரிப்பார்கள் என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.