சென்னை
‘மஹா’ புயல் லட்சத்தீவு அருகே நிலைகொண்டுள்ள நிலையில் தற்போது நவ. 4 அன்று வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“அரபிக் கடலில் ‘மஹா’ புயல் இன்று காலை 8.30 மணியளவில் லட்சத் தீவு பகுதியில் நிலவுகிறது. தற்போது இது அமினி தீவுக்கு வடகிழக்கில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து இன்று மதியம் தீவிரப் புயலாக வலுப் பெறக்கூடும்.
மேலும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியக் கிழக்கு அரபிக் கடலில் நிலவும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. சுமார் 33 இடங்களில் கனமழையும் 4 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 14 செ.மீ. மழையும் குன்னூரில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை தென் தமிழகப் பகுதியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ,சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் மீனவர்கள் மாலத்தீவுகள் மற்றும் கேரள கடல் பகுதியில் இன்றும் லட்சத் தீவு பகுதிகளுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தற்போதைய நிலவரப்படி வரும் நவம்பர் 4-ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இந்த தாழ்வுப் பகுதியானது மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக் கூடும் .
எனவே மீனவர்கள் அந்தமான் பகுதியில் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நவம்பர் 4, 5 தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்”.
இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.