சென்னை
மு.க.ஸ்டாலின் திருந்தவேமாட்டார் என, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.மணி இன்று (அக்.26) வெளியிட்ட அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சில கட்சிகள் சாதி உணர்வைத் தூண்டிவிட்டதால் தான் திமுக தோல்வியடைந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யுரைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும் சாதி, மத உணர்வுகளைத் தூண்டி வெற்றி பெற மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டு மறுப்பு தெரிவித்ததுடன், இனி வரும் காலங்களிலாவது அறம் சார்ந்த அரசியல் செய்ய முன்வரும்படி அறிவுரை வழங்கியிருந்தார்.
ராமதாஸ் வழங்கியிருந்த அறிவுரை மிகவும் நியாயமானது. மு.க.ஸ்டாலின் விரும்பினால் அதை ஏற்றுக் கொள்ளலாம்; விரும்பாவிட்டால் கடந்து போயிருக்கலாம்; இவற்றையெல்லாம் கடந்து ஸ்டாலின் அறம் விரும்பியாக இருந்திருந்தால், தம்மை நல்வழிப்படுத்தும் நோக்குடன் அறிவுரை வழங்கியதற்காக ராமதாஸுக்கு நன்றி தெரிவித்திருக்கலாம்.
ஆனால், இவை எதையும் செய்யாத ஸ்டாலின், ராமதாஸுக்கு முரசொலி நாளிதழ் மூலம் பதிலளித்திருக்கிறார். முரசொலி மூலம் ஸ்டாலின் கூறியிருக்கும் அற்புதமான பதில் என்ன தெரியுமா? அறம் பற்றி அவரது தந்தை கருணாநிதி 'பராசக்தி' திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சிக்கு வசனம் எழுதியிருக்கிறாராம். என்னவொரு சிறப்பான பதில். 'பராசக்தி' வசனத்தில் அறம் பற்றி கருணாநிதி கூறிவிட்டதால் அரசியலில் அதை கடைப்பிடிக்கத் தேவையில்லையா? இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவரை பெறுவதற்கு தமிழக மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? ஆனால், ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு இது பதில் இல்லையே ஸ்டாலின்!
அறம் குறித்த விளக்கம் மு.க.ஸ்டாலினின் அறியாமையைக் காட்டினால், அதற்கு பிறகு வரும் பகுதிகள் தான் அவரது உண்மை சொரூபத்தையும், உள்ளக்கிடக்கையையும் காட்டுகின்றன. ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுகவுடனும், திமுகவுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து அரசியல் வியாபாரம் செய்து வருகிறாராம். அரசியல் விஞ்ஞானி மு.க.ஸ்டாலின் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்.
அரசியலில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் மேற்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு ஏற்ற வகையில் அணி மாற்றம் நடப்பது வழக்கம். அரசியலில் நுழைந்த குழந்தைக்குக் கூட இது தெரியும். ஆனால், ஸ்டாலினுக்கு இந்த உண்மை தெரியவில்லை. இதில் வியப்படைவதற்கு எதுவும் இல்லை. அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான்.
இதே இலக்கணத்தை திமுகவுக்கு பொருத்திப் பார்க்க மு.க.ஸ்டாலின் தயாரா?
பாமகவுக்கு சட்டப்பேரவையிலும் உறுப்பினர் இல்லை; நாடாளுமன்றத்திலும் உறுப்பினர் இல்லை. அதிமுக போட்ட பிச்சையைப் பெற்று மகனை மாநிலங்களவை உறுப்பினராக்கி, அவருக்கு அமைச்சர் பதவியை ராமதாஸ் கேட்பதாக ஸ்டாலினின் குரலை முரசொலி ஒலித்திருக்கிறது. ஸ்டாலின் எந்தக் காலத்திலும் திருந்தமாட்டார்; அரசியல் நாகரிகம் அவருக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை.
சட்டப்பேரவையிலும், மக்களவையிலும் உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பது தகுதிக் குறைவு இல்லை. மாறாக ஓர் அரசியல் கட்சி நேர்மையாக இருப்பது தான் முக்கியம். அந்த நேர்மை பாமகவிடம் இருக்கிறது. மக்களவையில் பாமகவுக்கு உறுப்பினர் இல்லை என்று கூறும் திமுகவுக்கு 1989, 1991, 2014 ஆம் ஆண்டுகளில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தார்கள்? தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த திமுகவுக்கு 1991-ல் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தார்கள்? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?
பிரதமரைச் சந்திப்பதே அமைச்சர் பதவி கோருவதற்காகத் தான் என்பது திமுக வகுத்த இலக்கணம். பாமகவுக்கு அந்த வழக்கம் இல்லை. ஆனால், 2009 ஆம் ஆண்டில் இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அதற்காக இரங்கல் கூட தெரிவிக்காமல் டெல்லியில் முகாமிட்டு பதவிப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் யார்? என்பதை தமிழக மக்கள் அறிவர்.
ஆனால், ஒன்று மட்டும் உறுதி. தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழும். மு.க. ஸ்டாலினுக்கு மட்டும் அரசியல் அறமும், நாகரிகமும் வரவே வராது. அவர் திருந்தமாட்டார்," என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.