சென்னை
டாக்டர் பட்டம் பெற்றதால் எனது பொறுப்பு கூடியுள்ளது என முதல்வர் பழனிசாமி கூறினார்.
டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏசிஎஸ் கன்வென்ஷன் மையத்தில் இன்று நடந்தது.
விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது.
பின்னர் முதல்வர் பழனிசாமி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மனித சமுதாயத்திற்கு பணியாற்ற மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும். மாணவர்களுக்கு கனிவு, பணிவு, துணிவு தேவை. பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துகள்.
மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும். ஒழுக்கம், நீதிபோதனை போன்றவற்றை அறிந்தவனே முழுமையான மனிதனாவான். முயற்சி திருவினையாக்கும். டாக்டர் பட்டம் பெற்றதால் எனது பொறுப்பு கூடியுள்ளது.
உயர்க்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.6,800 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 6 சட்ட கல்லூரிகளை அதிமுக அரசு தொடங்கி உள்ளது. 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். முயன்றால் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.