சென்னை
முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று ராமதாஸ் பச்சையாகப் பொய் சொல்லியிருக்கிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் நடிகர் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை இரு தினங்களுக்கு முன் பார்த்தனர்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அசுரன் படம் மட்டும் அல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்," எனப் பதிவிட்டார்.
ஸ்டாலின் கருத்து குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா, அற்புதம். அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!," எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் இன்று (அக்.18) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.
ஸ்டாலின் தன்னுடைய பதிவில், "ராமதாஸ், தற்போது முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் பொய் சொல்லியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?," என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், தன் பதிவுடன் முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவையும் ஸ்டாலின் இணைத்துள்ளார்.