தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 80 ஆயிரம் பேரிடம் ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று 5 ஆயிரம் இடங்களில் போக்குவரத்து போலீஸார் சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் வந்த 80 ஆயிரம் பேரை பிடித்தனர். இதில் 42 ஆயிரம் பேரிடம் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரிஜினல் ஆவணங்கள் இல்லாத 38 ஆயிரம் பேரிடம் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களும், வாகனங்களும் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக் கப்பட்டன. அங்கு ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதையும், ஒரிஜினல் ஆவணங்களையும் காட்டி பறிமுதல் செய்யப்பட்டதை மீட்டுக்கொள்ளலாம். நீதிமன் றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அபராதம் விதிக்கச் சொல்வார். அந்த அபராத தொகையையும் கட்ட வேண்டும். சில நியாயமான காரணங்களை நாம் கூறினால் அவற்றை ஏற்று மாஜிஸ்திரேட் மன்னிப்பும் வழங்கலாம்.