சென்னை
பிரதமர், சீன அதிபரின் வருகையை ஒட்டி சென்னையில் நாளை மற்றும் நாளை மறுதினம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை விடுத்துள்ள அறிக்கை: தலைவர்களின் வருகையை ஒட்டி அக்.11, 12 ஆகிய தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை உள்ள ஜிஎஸ்டி சாலை, கத்திப்பாரா முதல் சின்ன மலை வரை உள்ள அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இந்த சாலைகளில் உள்ள ஐடி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் நாளையும், நாளை மறுதினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டாது.
மதுரவாயல் புறவழிச்சாலை..
மேலும், நாளை (அக்.11) பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலையில் அனுமதிக்கப்படாமல், மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்படும். மேலும் சென்னை தென்பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடி யல் ரோடு வழியாக குரோம் பேட்டை - தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்தி செல்லலாம். அதேபோல தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்த வேண்டும்.
நாளை பிற்பகல் 3.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப் பாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாக திருப்பி விடப்படும்.
நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ராஜீவ் காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
இதேபோல நாளை மறுதினம் (அக்.12) காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை ராஜீவ் காந்தி சாலையில் இருந்து நகருக் குள் வரும் அனைத்து வாகனங் களும் சோழிங்கநல்லூர் சந்திப் பில் பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும்.
அதேபோல நாளை மறுதினம் காலை 7 மணி முதல் பகல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலை யில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப் பில் முட்டுக்காடு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
தேசிய விருந்தினராக சென்னைக்கு வரும் சீன அதிபரின் இந்தியப் பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைய பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.