கொரியாவுக்கான இந்திய தூதர் ஸ்ரீப்ரியா ரங்கநாதனை சந்தித்த ஆளூர் ஷாநவாஸ் 
தமிழகம்

ஆளூர் ஷாநவாஸுக்கு 'சமூகப் பண்பாளர்' விருது: கொரிய தமிழ்ச் சங்க விழாவில் கவுரவிப்பு

செய்திப்பிரிவு

தென்கொரியாவில் கொரிய தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்றார். அங்கு அவருக்கு 'சமூகப் பண்பாளர்' விருது வழங்கப்பட்டது.

தென்கொரியாவில் உள்ள கியாங்கி பல்கலைக்கழக வளாகத்தில், கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் கலை இலக்கிய விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கணினித் தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் குறித்த நினைவுச் சொற்பொழிவை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஆளூர் ஷாநவாஸுக்கு 'சமூகப் பண்பாளர்' விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (அக்.8) கொரியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீப்ரியா ரங்கநாதனை ஆளூர் ஷாநவாஸ் சந்தித்து உரையாடினார்.

இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தன் முகநூலில் வெளியிட்ட பதிவில், "கொரியாவுக்கான இந்தியத் தூதர், ஸ்ரீப்ரியா ரங்கநாதனை இன்று சந்தித்தேன். கொரியா - இந்தியா உறவு குறித்தும், கொரிய மக்களின் மொழி, பண்பாடு, வாழ்வியலில் தமிழின் தாக்கம் குறித்தும், தூதரகம் மூலம் செய்யவேண்டிய மக்கள் பணிகள் குறித்தெல்லாம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது உரையாடல். அவரது எளிய அணுகுமுறையும் கனிவும் மனதை ஈர்த்தது. சந்திப்பின்போது, கொரியா தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் ஆரோக்கிய ராஜ் உடனிருந்தார்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT