தமிழகம்

இன்பதுரை முறையீடு; உச்ச நீதிமன்றத்தை அடுத்து உயர் நீதிமன்றமும் நிராகரிப்பு: நாளை மறுவாக்கு எண்ணிக்கை

செய்திப்பிரிவு

சென்னை

ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைகேட்டு அவசர வழக்காக விசாரிக்க அதிமுக எம்எல்ஏ இன்பதுரை செய்த முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதை அடுத்து உயர் நீதிமன்றமும் நிராகரித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத்தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது கோரிக்கை மனுவில், “வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்துவிட்டனர். 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என அப்பாவு தன் மனுவில் கோரியிருந்தார்.

இந்தத் தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்தத் தொகுதியில் பதிவான 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் வரும் 4-ம் தேதி மீண்டும் எண்ண வேண்டுமென்று உத்தரவிட்டு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

தாங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதால் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார். தான் பிறப்பித்த உத்தரவுக்குத் தானே தடை விதிக்க அதிகாரம் உள்ளதா? என்றும், தேர்தல் ஆணைய கால அவகாசம் கேட்பது குறித்தும் வரும் 3-ம் தேதி (இன்று) வழக்காக விசாரிப்பதாக தெரிவித்து 3-ம் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்பதுரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு ஒன்று மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு செய்யப்பட்டது. ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை முறையீட்டை விசாரித்த நீதிபதி ரமணா அமர்வு, வழக்கு பட்டியலிடப்படாமல் அவசர வழக்காக விசாரிக்க முடியாது. பட்டியலிடப்பட்டு வந்தால் விசாரணைக்கு எடுக்கிறோம் என நிராகரித்தது.

இந்நிலையில் இன்று உயர் நீதிமன்றத்தில் இன்பதுரை முறையீடு குறித்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இன்பதுரை தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருப்பதாவும், கேவியட் மனுவை அப்பாவு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்து இடைக்கால உத்தரவு கிடைக்கும் வரை அக்டோபர் 4 வாக்கு எண்ணிக்கை என்ற உத்தரவிற்கு மூன்று வார காலத்திற்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்பாவு தரப்பு வழக்கறிஞர், தேர்தல் வழக்கில் பிறப்பிக்கும் இடைக்கால உத்தரவை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பதில்லை என்றும், அதேபோன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்டுள்ள இன்பதுரை வழக்கு இன்னும் விசாரிக்கப்படாத நிலையில் வாக்கு மறுஎண்ணிக்கைக்கு தடைகோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும், தேர்தல் நடைமுறையில் குறைபாடுகள் இருந்ததை உரிய ஆதாரங்களுடன் உறுதி செய்த பின்னரே மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.

அப்போது இன்பதுரை தரப்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்த தவறுகளுக்காக மறுவாக்கு எண்ணிக்கை நடத்தபட்டால் தனது வெற்றியில் மாற்றத்தை ஏற்படுத்தும்பட்சத்தில் தான் பாதிக்கப்படுவேன் என்பதாலும், உச்ச நீதிமன்ற வழக்கு செல்லாத நிலைக்கு தள்ளப்படும் என்பதையும் சுட்டிக்காட்டி தடை விதிக்க கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி, தடை கோரும் இன்பதுரை மனுவை நிராகரிப்பதாக கூறி தள்ளுபடி செய்தார். அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுபடி நாளை தபால் வாக்குகளும், மூன்று சுற்றுகளின் மின்னணு இயந்திரங்களும் தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.

அதனை பதிவு செய்த நீதிபதி காலை 11:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை தொடங்கி முழுமையாக முடித்தவுடன் அது குறித்த அறிக்கையை நாளை (அக்டோபர் 4) தாக்கல் செய்ய தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT