சென்னை
பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிவறை வசதி இல்லை என, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸை இன்று (அக்.3) மத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் கூறுகையில், "தெற்கு ரயில்வேயின் பொது மேலாளரைச் சந்தித்து, நாங்கள் ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளுக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டோம்.
யானை கவுனி மேம்பாலப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணியை விரைவுபடுத்துவதாக எங்களுக்கு உறுதி அளித்தார். ஏனென்றால், யானை கவுனி மேம்பாலத்தைத் திறந்தால் வடசென்னையில் வாகன நெரிசல் பிரச்சினை வெகுவாகத் தீரும். வில்லிவாக்கம் பாலம் பணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் யாரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என பிரதமர் மோடி நேற்று காந்தி பிறந்த நாள் உரையில் கூறியிருந்தார். அதனை வரவேற்கிறோம். ஆனால், அதேசமயத்தில் தாம்பரம் - சென்னை, அரக்கோணம் - சென்னை வரும் எந்தவொரு ரயில் நிலையத்திலும் கழிவறை வசதி இல்லை," என தயாநிதி மாறன் தெரிவித்தார்.