விழுப்புரம் நகராட்சியில் சிவாஜி கணேசனின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட பதிவேடு. 
தமிழகம்

‘நான் பிறந்த ஊர் விழுப்புரம்’: நடிகர் திலகம் பெருமிதம்

செய்திப்பிரிவு

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இந்த தலைமுறைக்கும் அறிமுகம் தேவையில்லை. காலத்தால் அழிக்க முடியாத கலை மகன்.

இவர் 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி விழுப்புரத்தில் பிறந்தார். திரையுலகில் வி சி கணேசனாக, அதாவது விழுப்புரம் சின்னய்யா கணேசனாக அறிமுகமாகி, பின்னர் சத்ரபதி சிவாஜி நாடகத்தில் நடித்ததால், 'சிவாஜி கணேசன்' என அழைக்கப்பட்டார்

1962-ம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்றார். இந்த வகையில் இந்தியாவில் இருந்து சென்ற முதல் கலைஞர் சிவாஜி கணேசன். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை, ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியின் கௌரவ மேயராக நியமித்து, அவரிடம் அதற்கான சாவியையும் அளித்தனர். அதே ஆண்டில் செப்டம்பர் 28ம் தேதி விழுப்புரம் நகரமன்றம் சார்பில், சிவாஜிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப் பட்டார் சிவாஜி கணேசன். விழா மேடைக்கு வரும் வழியில் நந்தவனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வள்ளலார் சத்திய ஞான சபைக் கட்டிடத் தைத் திறந்து வைத்தார். பின்னர் அப்போதைய நகரமன்றத் தலைவர் டி.எஸ்.பத்தர் தலைமை யில் விழா நடை பெற்றது.

அதில், சிவாஜி கணேசனின் பிறப்புச் சான்றிதழை வெள்ளிப் பேழையில் வைத்து, நகராட்சி சார்பில் அவருக்கு அளிக்கப்பட்டது.

இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சிவாஜி கணேசன் “நான் பிறந்தது விழுப்புரத்தில்தான் என உறுதியாகக் கூறி, அதற்கான சட்ட பூர்வமான அத்தாட்சியை வழங்கியமைக்கு நன்றி: என் பிறப்பை பதிவு செய்தாரே ஒரு பியூன் அவருக்கு ஐம்பது அறுபது வயதிருக்கும். அவர் மூலம் எனக்கு அந்த சர்டிபிகேட் பிரசன்ட் செய்தார்கள். அன்று நான் அடைந்த சந்தோஷம் போல் என்றும் அடைந்ததில்லை. என்னுடைய பிறப்பிற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறதென்று, அப்போது நான் தெரிந்து கொண்டேன்'' என்றும் தன் சுய சரிதையில் கூறியுள்ளார். இன்று சிவாஜி பிறந்தநாள்

SCROLL FOR NEXT