தேனி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவும் அவருடைய தந்தை மருத்துவர் வெங்கடேசனும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
உதித் சூர்யா மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும், தந்தை வெங்கடேசன் தேனி நீதித்துறை முதன்மை நடுவர் நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
வெங்கடேசனின் மனு வரும் அக்டோபர் 3-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் உதித் சூர்யா ஏற்கெனவே முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்ததால் அவர் ஜாமீன் மனுவையும் அங்கேயே தாக்கல் செய்திருக்கிறார்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்தவர். இவரது மகன் உதித் சூர்யா, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது மருத்துவக் கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து தேனி மாவட்டத்தில் உள்ள க.விலக்கு காவல் நிலையத்தில் மாணவர் உதித் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், உதித் சூர்யா மீது கூட்டுச்சதி 120 (பி), மோசடி செய்தல் (419), ஏமாற்றுதல் (420) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் தேடி வந்தனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள மாணவரின் வீடு உட்பட பல இடங்களில் தேனி மாவட்ட தனிப்படை போலீஸார் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உதித் சூர்யா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை கடந்த 22-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, போலீஸ் டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். முதல்கட்டமாக, தலைமறைவாக இருக்கும் உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரைப் பிடிக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உதித் சூர்யா திருப்பதியில் இருப்பதைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
3 பேரிடமும் தேனி மாவட்ட சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
குற்றத்தை ஒப்புக்கொண்ட உதித் சூர்யா, அவரது தந்தை கைது செய்யப்பட்டனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உதித் சூர்யாவும் அவரது தந்தையும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.