கோப்புப்படங்கள் 
தமிழகம்

அதிமுக ஆட்சியில் தூர்வாரும் பணியில் 18% கமிஷன்; மக்கள் குற்றச்சாட்டை முதல்வர் மறுக்க முடியுமா?- டி.ஆர்.பாலு கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை

அதிமுக ஆட்சியில் தூர்வாரும் பணி முறையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், டெல்டாவில் கடைமடைக்கு நீர் போகாதது ஏன் என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகளை தமிழக முதல்வரிடம் திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு முன்வைத்துள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சியில் நடக்கும் தூர்வாரும் பணியில் அமைச்சர்கள், நிர்வாகிகள் 18 சதவீதம் கமிஷன் அடிக்கிறார்கள் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். முதல்வரால் இல்லை என்று மறுக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதைப் பேசுவது என்று தெரியாமல், எதையாவது பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவர் வேறு யாருக்கோ எதற்கோ பயந்து, பேசுவது போல் தெரிகிறது. பொய்யாக, போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதற்காக, சூதான எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட ஒரு வீண் புகாரை மேற்கோள் காட்டி வீராணம் ஊழல் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.

கருணாநிதி கோடிட்டுக் காட்டிய வீராணம் திட்டத்தைத்தான், முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டுவந்து நிறைவேற்றினார் என்ற அடிப்படை தகவலைக் கூடத் தெரிந்துகொண்டு பேசுவதற்கு முதல்வர் தயாராக இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

திமுக ஆட்சியில் வீராணம் ஊழல் என்று கூறும் முதல்வர், அதிமுக ஆட்சியில் முதல்வரே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதையும், தற்போது முதல்வராக இருக்கும் இவர் மீதே அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் லஞ்ச, ஊழல் தடுப்புத்துறையில் நிலுவையில் இருப்பதையும் ஏனோ மறந்து விட்டார். ஊழல் வழக்கின் மீது சிபிஐ விசாரணை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் ஓடோடிச் சென்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கியது யார்? சாட்சாத் முதல்வர்தானே!

தன் முதுகில் எந்த அழுக்கும் இல்லை; பரிசுத்தமானவர் என்றால் உச்ச நீதிமன்றத்தில் தான் வாங்கிய ஸ்டேயை விலக்கிக் கொண்டு ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள முதல்வர் தயாரா? ஏதோ உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து தடை ஆணை பிறப்பித்ததைப் போலப் பேசுவது ஏன்? முதல்வர் பொறுப்பில் உள்ள காவல்துறையில் நடைபெற்றுள்ள 350 கோடி ரூபாய் டெண்டர் ஊழலை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கத் தயாரா?

குடிமராமத்து திட்டத்தை திமுக ஆட்சி கொண்டு வந்தது என்பதை நாங்கள் நிரூபிக்கிறோம். அது அதிமுகவின் திட்டம்தான் என்பதை நிரூபிக்கத் தயாரா? காவிரி கால்வாய் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தூர் வாரிய பணிகளை ஏற்கெனவே எங்கள் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் பட்டியலிட்டிருக்கிறார். அதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாத முதல்வர், “எந்தப் பகுதியிலாவது தூர் வாரியதை திமுக ஆட்சியில் பார்த்து இருக்கிறீர்களா” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் அவர், கடந்த காலக் கொள்கை விளக்கக் குறிப்புகளை படிப்பதே இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

அதிமுக ஆட்சியில்தான் தூர்வாரும் பணிகளைச் செய்து வருகிறோம் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார் முதல்வர். அதிமுக ஆட்சியில் தூர்வாரும் பணி முறையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், காவிரி டெல்டாவில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் போகாதது ஏன்? காவிரி உபரி நீர், நேரே கடலில் போய்க் கலப்பது ஏன்? இதற்கெல்லாம் முதல்வர் பதில் சொல்ல முடியுமா?

அதிமுக ஆட்சியில் குடிமராமத்துப் பணிகள் ஏரி குளங்களைத் தூர் வார அல்ல! அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் குடி உயரவும், கொள்ளை பரவவும் உருவாக்கப்பட்டது. உங்கள் ஆட்சியில் நடக்கும் தூர்வாரும் பணியில் 18 சதவீதம் கமிஷன் அடிக்கிறீர்கள் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். முதல்வரால் இல்லை என்று மறுக்க முடியுமா?

தமிழக மாணவர்களை அரசுப் பணியில் சேர விடாமல் தடுக்கும் வகையில் ஒரு புதிய பாடத்திட்டத்தை அறிவித்து விட்டு- தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், தன்னாட்சி அமைப்பு என்கிறார் முதல்வர். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் அதிமுகவினரை உறுப்பினர்களாக நியமித்து - அதை அதிமுகவின் அலுவலகமாக மாற்றி அமைத்து உச்ச நீதிமன்றம் வரை போய் மூக்குடைபட்டதையும், அதை நாட்டு மக்கள் பார்த்து நகைத்ததையும் ஏனோ முதல்வர் வசதியாக மறந்து விட்டார்.

ஆகவே, முதல்வர் பழனிசாமி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் அணைகள் கட்டியதும், காவிரிக் கால்வாய்களைத் தூர் வாரியதும், எதிர்க்கட்சி என்ற நிலையிலும் திமுக ஏரி குளங்களைத் தூர் வாரியதும், ஸ்டாலினே முன்னின்று பல மாவட்டங்களில் தூர் வாரச் செய்திருக்கிறார் என்பதும் தமிழக மக்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்கு தெரியும்.

சேலத்தில் ஏரியை தூர்வாரப் போன ஸ்டாலினைத் தடுத்தவர் நீங்கள். ஆகவே அவரைப் பற்றிப் பேசுவதற்கு, எந்தத் தகுதியும் உங்களுக்கு இல்லை என்பதை முதலில் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் நல்லது; உங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது'' என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT