தமிழகம்

கீதை, பைபிள், குரான் முன்னால், ராணுவ வீரர்கள் சத்தியப் பிரமாணம்

ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்

வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த 320 இளம் ராணுவ வீரர்கள், சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைப் பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்படுவர்.

46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 320 பேர், பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாகப் பணிபுரிய சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

பிரசித்தி பெற்ற ஸ்ரீநாகேஷ் பேரக்ஸில் நடந்த நிகழ்ச்சியில் பயிற்சிக்குச் செல்லும் ராணுவ வீரர்கள், பகவத் கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.

ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு மேற்கொள்ளப்பட்ட ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களைக் கவர்ந்தது. பயிற்சி வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி முதன்மை விரிவுரையாளர் மேஜர் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி ஏற்றுக் கொண்டு, பயிற்சியின் போது சிறந்து விளங்கிய ராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கிக் கவுரவித்தார்.

தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாய், அணிவகுத்து வந்த காட்சியைக் கண்ட வீரர்களின் பெற்றோர், நாட்டின் பாதுகாப்புக்காக அவர்களை அனுப்புவதை எண்ணிப் பெருமிதம் அடைந்தனர்.

பயிற்சியை முடித்த ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில், ராணுவ உயர் அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT