தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் வழக்கில் மின்வாரிய தொழிற்சங்கங்களை பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த 'கன்ஸ்யூமர் வாய்ஸ்' அமைப்பைச் சேர்ந்த லோகநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகம் முழுவதும் உள்ள ஒன்பது மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய அலுவலகத்தில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை பணி நேரமாக உள்ளது.. அதுபோல மின் கட்டணம் வசூல் மையம் காலை 8.30 முதல் 2.30 வரை உள்ளது.
ஆனால் பெரும்பாலான அலுவலகத்தில் உரிய நேரத்தில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை, மிகவும் காலதாமதமாக வருவதால் காலையில் மின் அலுவலர்களை நீண்ட நேரம் காத்திருந்து பார்க்ககூடிய நிலை உள்ளது என்றும் மேலும் மின் பணி தொடர்பாக பல முறை அலுவலகம் சென்றாலும் பிரிவு அலுவலர்களை பார்க்க இயலாத நிலை உள்ளதாக குற்றசாட்டு உள்ளது”. என்று தெரிவித்திருந்தார்.
எனவே அனைத்து மின் வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோ மெட்ரிக் கருவி பொருத்த வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார் இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு மின் வாரியம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் மின்வாரிய தொழிற்சங்கங்களை பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.